ஆஷிர்வாத்
இன்றைய சூழலில், சாமானியர்களின் பொதுவெளியில் அதிக கவர்ச்சியுடன் உடை அணிபவர்கள் திருநங்கைகள்தான். நோயாளியாக வந்த திருநங்கை ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஏன் அவர்கள் பெரும்பாலும் சிறிய இரவிக்கை, அதீத லோ ஹிப் என வைத்து முதுகையும், வயிறையும், தொப்புளையும் இப்படி வலிந்து காட்சிப்படுத்துகிறார்கள் என்று கேட்டதற்கு, அது தங்களுக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னாரேயொழிய அவரிடம் அதற்கான பெரிய காரணங்கள்/விளக்கங்கள் இல்லை. உடலளவில் ஆண், மனதளவில் பெண் என்ற நிலையில் அவர்களுக்கு, உடலை மனம் வெல்லவேண்டும். தனக்கான ஆண் என்ற அடையாளங்களை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறாள். உடல் ரோமங்களை மழித்துவிடுவது போதவில்லை. பெண்களின் கவர்ச்சி அடையாளங்களாக இருக்கும் பகுதிகளை கொஞ்சம் பகிரங்கப்படுத்துகிறார்கள். துணிகளை சுருட்டி இரவிக்கைக்குள் வைத்துக்கொள்கிறார்கள். உதட்டு சாயத்தை அடர்த்தியாக பூசிக்கொள்கிறார்கள். இடுப்பை வெட்டி நடக்க பழகிக்கொள்கிறார்கள். உடைந்த கரகரப்பான ஆண் குரலில் ஒரு பெண்மையை சேர்ப்பதற்காக எடுக்கும் முயற்சியில் ஒரு ராகம் வந்துவிடுகிறது. இவற்றின் முடிவில் கிடைக்கும் ஒரு இறுதி தோற்றம், அவர்களின் தாழ்வு மனப்பான்மையை உடைக்கவும், தன்னம்பிக்கையை உயர்த்தி பிடிக்கவுமே அன்றி, போறவன் வர்றவனையெல்லாம் படுக்கைக்கு அழைப்பதற்கு அல்ல.
தெரிந்தோ தெரியாமலோ, திருநங்கைகள் மீது ஒரு விரக சாயம் ஒட்டப்பட்டிருக்கிறது. சென்னை வந்த புதிதில் மின்சார ரயிலில் ஆசிர்வாதம் செய்யும் அக்காகள் தொடும்போது விவரிக்கமுடியா அருவருப்பு வரும். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த எந்த பாடமும் அவர்களைப் பற்றி சொல்லித்தரவில்லை. வீரமற்ற ஆண்மகனை பேடி என்று சொல்லும் செய்யுளைத்தான் நம் பாடநூல் சொல்லிக்கொடுத்தது. ஒம்போது, அஜக்கு, அலி... இவையெல்லாம்தான் பள்ளி நாட்களின் இறுதியில் ஒரு மாணவனின் பார்வை. யாரோ ஒருவர் ஒரு புள்ளியில், உங்களின் ஒரு பார்வையை மாற்றவேண்டும். குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துவந்து காப்பாற்ற போராடிய நளினா அக்காவை நினைத்துக்கொள்கிறேன். அந்த குழந்தை மரணித்தப்போது அந்த அக்கா அக்குழந்தையின் அம்மாவிற்கு கொடுத்த சாபங்களை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாத தன்னுடைய ஆற்றாமையை அழுது அரற்றி தீர்த்ததை நினைத்துப்பார்க்கிறேன். பாரிமுனை பேருந்து நிலையத்தில் மணி-பர்ஸை மடக்கி மாரிடுக்கில் சொருகி உதட்டை கடிக்கும் திருநங்கைளும், ரயிலில் டெல்லி சென்றுகொண்டிருக்கும்போது ஆசிர்வாதம் செய்ததற்கு காசு மறுத்த நண்பனின் முன் வந்து நின்று பாவாடை தூக்கி அவன் முகத்தின் மேல் போட்டு தலையை உள்ளே முக்கிய ஒரு திருநங்கையையும் கடந்துவரும்போதெல்லாம் அந்த அக்காவைதான் நினைத்து பார்க்கிறேன். பள்ளி முடிவில் இருந்த எண்ணங்களை இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இன்றும் மனதின் ஆழத்தில் அதெல்லாம் முழுவதுமாக மாறிவிட்டதா என்றுகூட உத்திரவாதமாக தெரியவில்லை.
பேருந்தில் திருநங்கைகளின் பக்கத்தில் இருக்கை காலியாக இருந்தால் போய் உட்கார்ந்திருக்கிறீர்களா? தன் சக பயணிகளிடம் அவர்களைப் போல பேச்சுத்துணை கொடுப்பவர்கள் யாருமே இல்லை என்பேன். முக்கியமாக அவர்கள் பச்சாதாபம் தேடுவதில்லை.
நாகப்பட்டினத்தில் பணியில் இருந்த நாட்களில் காலை ஐந்தேமுக்காலுக்கு தனலக்ஷ்மி என்ற தனியார் பேருந்தில்தான் பயணம் செய்வேன். அப்போது ஓரிரு வாரங்களில், அதே பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்பவர்கள் ஓரளவிற்கு பரீட்சயம் ஆகிவிட்டார்கள். அந்த பேருந்தில் ஒரு தனி இருக்கை இருக்கும், அதில் ஒரு வாலிபர் வாடிக்கையாக அமர்வார். ஒரு நாள் பேருந்திலிருந்து இறங்கி மருத்துவமனை நோக்கி நடந்துக்கொண்டிருக்கும்போது, கொஞ்சம் வேகமாக பின்தொடர்ந்து வந்து நீங்கள் எந்த துறை மருத்துவர் என்று கேட்டார், அறுவை சிகிச்சை என்றதும், அடுத்த நாள் பேருந்தில் வரும்போது சில சந்தேகங்கள் கேட்கவேண்டும் என்றார். அடுத்த நாள், அவர் ஆணாக உணர்ந்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் என்று சொன்னபோது தூக்கிவாரிப்போட்டது. பார்க்கும் எவருக்கும் அவர் பெண் என்று துளி கூட சந்தேகம் வராது. அதுவரையில் திருநங்கை என்று பெண்ணாக உணரும் ஆண்களைத்தான் நான் கேள்விப்பட்டிருந்தேன், பார்த்திருந்தேன். நான் சந்தித்த முதல் trans-man அவர்தான். திருநங்கை என்பதை போல அவர்களுக்கான தமிழ் சொல் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. திருநங்கைகளுக்கு இருக்கும் அங்கீகாரம்கூட இவர்களுக்கு இல்லை. சொல்லப்போனால் திருநங்கைகளே இவர்களை சமமாக நடத்துவதில்லை. சிறுபாண்மையில் சிறுபாண்மையான இவர்களின் குரல்கள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை.
அவர் என்னிடம் கேட்டது, பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் வழிகள் உண்டா என்பதுதான். அவர்களுக்கான பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு மார்பகங்களையும் அகற்றி, இடுப்பு பக்கவாட்டு சதையை ஆண்குறி வடிவில் மாற்றி, பெண் பிறப்புறுப்பு தோலின் அடியில் இரண்டு செயற்கை விதைகளை வைத்து, கிட்டத்தட்ட ஆணாக புறத்தோற்ற மாற்றம் செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சையை விட (ஆணுறுப்பு/விதை நீக்கம்) இவை கடினமான மற்றும் அதிகம் செலவாகும் சிகிச்சைகள். பத்து லட்சங்கள் வரை கூட ஆகலாம்.
தான் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வளவு பொருட்செலவிலான சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். விசாரித்து சொல்வதாக சொல்லிவிட்டு, எனக்கு தெரிந்த சில பிளாஸ்டிக் சர்ஜன்களிடம் பேசினேன்; விஷயத்தை சொன்னதுமே பதறி ஓடினார்கள். ஏதோ ரகசிய சதி திட்டம் போல சத்தமாக கூட பேச மறுத்தார்கள். அதிலும் ஒருவர், பெண்கள் சிலர் மார்பு அளவை பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ தன்னிடம் ஆலோசனைக்கு வந்தால்கூட தான் மறுத்து திட்டி அனுப்பிவிடுவதாக பெருமையுடன் சொன்னார். அப்படியெல்லாம் பிராக்டீஸ் செய்திருந்தால் அந்த ஊரில் இந்நேரம் பாதியை வாங்கியிருக்கமுடியும் என்று பெருமை பீத்திக்கொண்டார். மருத்துவர்கள் பலருக்கே பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய போதுமான தெளிவு இல்லை என்பது அந்த நாட்களில்தான் புரிந்தது. அதை ஏதோ சட்டத்திற்கு புறம்பான காரியம் போல உருவகப்படுத்தி பேசினார்கள்.ஒரு சிலர் இது இயற்கைக்கு எதிரானது என்றார்கள். ஒரு விதத்தில் இயற்கைதான் அவர்களுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருக்கிறது; அந்த இயற்கைக்கு எதிராக அவர்கள் போராட வேண்டும் என்பதுதான் சரி.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் குறித்த மசோதாவை திருச்சி சிவா தனிநபர் மசோதாவாக ராஜ்ய சபாவில் தாக்கல் செய்து அது ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழகம்தான் தேசிய அளவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமை கோரலில் முதல் இடத்தில் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.(ஆண் பெண்ணாக மாறும் சிகிச்சை மட்டும்) அப்படி எதுவும் இதுவரைக்கும் நடந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. இன்னமும் நாம் அதை பாம்பே ஆப்பரேஷன் என்றுதான் சொல்லிகொண்டிருக்கிறோம். கேரளத்திலும் இப்போது அரசு மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று சொல்கிறார்கள். இன்னமும் trans-man'களுக்கான சிக்கல்கள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் NALSA'வின் சமீபத்திய அறிவுறுத்தல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை கோர, இந்த அறுவை சிகிச்சைகள் எதுவுமே அவசியம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது. எந்த ஒரு காஸ்ட்லி ஹார்மோன் சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ தேவையில்லை; ஒரு விண்ணப்பம், இரு செய்தித்தாள் விளம்பரம், பதிவாணயத்தில் ஒரு பாலின மாற்றப்பதிவு - இவ்வளவு போதும்.
இருந்தும் இன்னும் நிறைய குழப்பங்கள் தீரவேயில்லை. தீரப்போவதும் இல்லை. சட்டங்களும், விதிமுறைகளும் தாள்கள் அளவில்தான் இருக்கின்றன. பாஸ்போர்ட் வழங்குமிடத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் (அது சிகிச்சைக்கு பின்னரே தர இயலும்) கேட்கிறார்கள். 'ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்- பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்' என்று திருமந்திரம் இயற்றிய தேசத்தில், அங்கீகாரம் எல்லாம் ஐ படத்தில் ஓஸ்மா'விற்கு மருத்துவமனையில் ஒன்பதாம் எண் அறை கொடுக்கப்பட்டதற்கு கைத்தட்டி சிரிக்கும் அளவில்தான் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் கொஞ்சம் மூன்றாம் பாலினத்தை பற்றி படித்து புரிந்துகொள்ளலாம். முடியாதவர்கள் கூட்ட நெரிசல் இருக்கும் பேருந்தில் அவர்களுக்கு அருகிலான இருக்கை கிடைத்தால் (பெரும்பாலும் அது காலியாகத்தான் இருக்கும்) சகஜமாக அமர்ந்து அவரிடம் பேச்சு கொடுக்கலாம். அல்லது குறைந்தபட்சம், ரயிலில் அவர்கள் ஆசிர்வாதம் செய்து அக்காவிற்கு காசு கொடுப்பா என்று கேட்கும்போது, தப்பிக்கும் தொணியில் காசை கொடுத்து முகத்தை திருப்பிக்கொண்டு, போலி கர்ணன் வேஷம் போடாமல், காசு இல்லையே அக்கா என்று அவர்கள் முகத்தை பார்த்துமட்டும் சொல்லலாம். அந்த ஆசிர்வதம் நிச்சயம் உங்களுக்கு அர்த்தப்படும்.
*