இலைமறை?

மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் மாக்ஸிம் கார்கியின் Mother, இரண்டையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். முந்தையது முடியும் தருவாயில் இருக்கிறது.  
மறைவாய் சொன்ன கதைகள். பாலியல் கதை என்பதன் வடிவம் புரிந்துகொள்ள கொஞ்சம் சிக்கலானது. வாசிக்க ஆரம்பித்து பத்து பக்கங்களுக்குள் வாசிப்பவரை கரமைதுனம் செய்யவைப்பது பாலியல் இலக்கியமாக பாவிக்கப்படவில்லை. மாறாக பாலியல் சொற்களை, குறிப்பாக நாட்டுப்புற கதைகளில் கெட்டவார்த்தைகளை எந்தவொரு லஜ்ஜையுமின்றி பிரயோகிப்பது பாலியல் கதையாக இங்கே முன்வைக்கப்படுகிறது. கி.ரா'வின் தொகுப்பு கிட்டத்தட்ட அப்படியானதுதான். இது வரையிலான எனது குறுகிய வாசிப்பில் தமிழில் சிறந்த பாலியல் எழுத்து என்று எதுவுமேயில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒன்று பபிதா ஆண்ட்டி போன்ற பிட்டுக்கதைகள் கிடைக்கின்றன. வா.மு.கோமு, ஜே.பி.சாணக்யா போன்றோரின் எழுத்துகள் இவற்றிற்கு மிக அருகில் இருக்கின்றன. மாய்ந்து மாய்ந்து உடலை வருணித்து, அதற்கான வாசகர்களின் இச்சைக்கு தீனிப்போடுகிறார்கள். அல்லது இது போன்ற கெட்டவார்த்தைகளையும்/பிறப்புறுப்பு பெயர்களையும் பத்திக்கு பத்துமுறை பிரயோகிக்கும் கதைகள். இப்படியான கதைகளுக்கு சிலரிடம் ஓர் அதிர்ச்சி மதிப்பீடு இருக்கலாம் என்பதைத்தாண்டி பெரிதாக எதுவுமில்லை.

முன்னொரு காலத்தில், 'ச்சில்டு பியர்ஸ்' என்ற பெயரில் ஒருவர் ப்ளாக் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய தளத்தில், திரையின் வலது புறத்தில் ஒரு பெட்டியில் எப்போதும் கி.ரா'வின் ஏதோவொரு நாட்டுப்புற பாலியல் கதைக்கான இணைப்பு இருக்கும். எனவே கி.ரா'வின் இந்த கதைகள் குறித்து ஏற்கனவே எனக்கு ஓர் அனுமானம் உண்டு. அவை முழுமையான பாலியல் கதைகளே அல்ல என்பது தெரியும். கிளர்ச்சியில் எல்லாம் முதலில் எடுக்கவில்லை. அப்படி எடுத்த நாட்களெல்லாம் உண்டு. எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டில், குற்றம் மற்றும் தடயவியல் சார்ந்த மருத்துவம் ஒரு தனி பாடமாகவே உண்டு. பதினெட்டு வயதில் அந்த புத்தகத்தைக் கையில் எடுத்த வேகத்தில், அணிச்சையாக கிட்டத்தட்ட எல்லோருமே பாலியல் குற்றங்கள் பாடத்தைதான் வாசிப்போம். அந்த பாடம் நடத்துவதற்கு முன்பே பேராசிரியருக்கே வகுப்பெடுக்கும் அளவிற்கு எங்களில் பெரும்பாலானோர் தயாராக இருந்தோம்.
அந்த பாடத்தின் பேராசிரியர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. விதண்டாவாத ஆசாமிகள். வைவா நேரங்களில் விழி பிதுங்க வைத்துவிடுவார்கள். நாற்காலியில் அமர்ந்து நாம் ஆசுவாசம் அடைவதற்குள், கல்லூரி நூலகத்தில் எப்போதாவது கரமைதுனம் செய்திருக்கிறாயா என்பார்கள், அந்த கேள்வியின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள், வாழ்வில் எப்போதாவது கரமைதுனம் செய்திருக்கிறாயா என்ற கேள்வி சத்தமாக வரும். பொது இடங்களில் கரமைதுனம் செய்வது குற்றம் என்ற பாடம் சம்பந்தமான பாயிண்டிற்குதான் வருகிறாராம். தேர்விற்கான நெருக்கடியில் இருக்கும் ஒருவனை, வரிசையில் பதிலளிக்க நிற்கும் தோழிகளின் முன் இதுப்போன்ற அமில சோதனைகள் செய்துப்பார்ப்பதில் அவர்களுக்கு ஓர் அற்ப சிற்றின்பம். இந்த கேள்விகளை கல்லூரிவிடுதியில் வந்து கேட்டுப்பார்க்க வேண்டும். நாண்டுக்கொள்வார்கள். பெண்களையும் இப்படியேதாவது குதர்க்கமாக கேட்டு அழவைத்து ஆனந்தமடைவார்கள்.

ஒரு முன்னறிவிக்கப்படாத திடீர் வைவாவில், எல்லோரிடமும் எந்த பாடம் வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கிட்டத்தட்ட எல்லோரும் சொல்லிவைத்தாற்போல அந்தவொரு பாடத்தையே சொல்ல, sin of Gomarrah, சட்டம் 376'ன் உட்பிரிவுகள், necrophilia என்றால் என்ன, இப்படியாக கேட்டுக்கொண்டே வந்தவர், அதே அலைவரிசையில், penal erasure என்றால் என்ன என்றார். அந்த பாடத்தில் அப்படியொரு பதம் வரவில்லை என்று உறுதியாக தெரிந்தாலும், அதுவரை அத்தனை நேர்த்தியாக பதில் சொல்லிவந்தவனுக்கு இந்த கேள்வியை விட்டுக்கொடுப்பதை ஈகோ அனுமதிக்கவில்லை. கேள்வியை இன்னொரு முறை உறுதிசெய்துக்கொண்டேன். மனிதர் வேண்டுமென்றே penal என்பதை penile என்பதாக உச்சரித்தார். பதிலளிக்க என்னை தயார் செய்துவிட்டேன். அடுத்த ஒரு நிமிடம் நான் சொன்ன அந்த நீண்ட பதிலுக்கு, அதற்கடுத்த ஐந்து நிமிடங்கள் அந்த மனிதர் சிரித்துக்கொண்டேயிருந்தார். அவர் தோண்டிய குழியில் நான் விழுந்துவிட்ட வெற்றிக்களிப்பு என்பதைவிட, நான் சொல்லிய பதிலில் இருந்த தன்னம்பிக்கையின் துல்லியம் அந்த மனிதரை அப்படி சிரிக்கவைத்திருக்கவேண்டும். அந்த பதிலை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். அந்த பதத்தின் அர்த்தம் தெரிந்தப்போது, அவன் வலையில் விழுந்துவிட்டோமே என்று சிறுமைப்பட்டு உள்ளே கனன்றுகொண்டிருந்தேன். அதாவது, மகிழ்மதியின் விதிமுறையை மீறும் மருத்துவர்களை இந்திய மருத்துவக்கவுன்ஸில் எனும் கோட்டையைவிட்டு வெளியேற்றும் ராஜமாதாவின் கட்டளையே penal erasure.

பின்னொரு நாளில் அதே ஆசாமி பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த என்னை எழுப்பிவிட்டு நடத்திக்கொண்டிருந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியைத் தொடுத்தார். ஏற்கனவே அந்த மனிதர் மீதிருந்த வெறுப்பில், என்ன கேட்டாலும் தர்க்கரீதியான ஒரு பதிலை சொல்லிவிடவேண்டும் என்று சுய பிரக்ஞையின்றி உள்ளூர தயாராகி, ஒருவித வேகத்தில் எழுந்து நின்றேன். நடத்திக்கொண்டிருந்த பாடம், ஆணுறுப்பு விறைப்புத்தன்மை பற்றியது. எனக்கான கேள்வி, உடலியல் சார்ந்த விறைப்புதன்மையிழப்பையும் உளவியல் சார்ந்த விறைப்புதன்மையிழப்பையும் எப்படி வேறுபடுத்தி கண்டுப்பிடிப்பது என்பதுதான். மறுபடியும் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று கற்பனையெல்லாம் செய்யவேண்டாம். முதலில் இவையிரண்டும் என்னவென்று சொல்லிவிடுகிறேன். ஒருவருக்கு ஹார்மோன் அடிப்படையிலான உடலின் ரசாயண கோளாறினாலோ, ஆண்குறிக்கான ரத்த ஓட்டம், நரம்பு சம்பந்தமான பிரெச்சனைகளால் விறைப்பு வராமல் போவது முதல் வகை. இரண்டாம் வகை, கொஞ்சம் சிக்கலானது மேற்சொன்ன எந்த பிரெச்சனையும் அந்த மனிதருக்கு இருக்காது. ஆனாலும் விறைப்பு இருக்காது. காரணம் உளவியல் சிக்கலாக இருக்கும். செக்ஸ் குறித்த பதற்றமோ வெறுப்போ காரணமாக இருக்கலாம். தன் இணையின் மீதான எண்ணமும் ஒரு காரணம்; காதலியிடம் விறைப்பு வரும், விலைமகளிடம் வராது. இது பிரெச்சனையில்லை. இதற்கு எதிர்மறையானது நடந்தால்தான் சிக்கல். எனவே, உளவியல் ரீதியான விறைப்புத்தன்மையற்றவரை, அதிகாரப்பூர்வமாக விறைப்புத்தன்மையற்றவர் என்று சொல்லிவிடமுடியாது. அவரை சரியாக வேறுபடுத்தி கண்டுபிடிக்கவேண்டும். மனநல சிகிச்சை கொடுக்கவேண்டும்.

இப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வருகிறேன். இவ்விரண்டையும் எப்படி வேறுபடுத்தி கண்டுபிடிப்பது என்று அவர் கேட்டதும் சம்பந்தப்பட்ட நோயாளியை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தினால் கண்டுபிடிக்கலாம் என்று சொன்னேன். நேர்மையாக  சொல்லவேண்டுமெனில், அந்த மனிதர் மீதிருந்த எரிச்சலில் இன்னும் கொச்சையாகவே சொன்னேன். அந்த ஆங்கில பதிலை இங்கே இவ்வளவு மொழிப்பெயர்த்தால் போதும். முதல் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்ததாலும், கொஞ்சம் வேகமான பதிலளிப்பினாலும் பின்னாலிருந்தவர்களுக்கு புரியவில்லை. ஆனால் அந்த மனிதர் சில வினாடி தெறித்து பேதலித்துப்போய் நின்றார். சரியான பதில் பின்னர் தெரியும்போது எனக்கே கூச்சமாக இருந்தாலும், அந்த வினாடி, அந்த மனிதரை சலனப்படுத்திய களிப்பில், மனதில் எலெக்ட்ரானிக் கிட்டார் பின்னணி இசையுடன், அல்ட்ரா ஸ்லோமோஷனில் இருக்கையில் அமர்ந்தேன்.

அதற்கான பதில் nocturnal penile tumescence (உறக்கவிறைப்புகள்). அதாவது, உறக்கத்தில் இரண்டு உறக்கநிலைகள் மீண்டும் மீண்டும் சுழற்சியில் வரும். ஒன்று மேல்நிலை, மற்றது ஆழ்நிலை. இந்த ஆழ்நிலை உறக்கத்தில்தான் கனவுகள் வருகின்றன. (உறக்கம்/கனவுகள் பற்றி நான் சிவப்பு மனிதன் திரைப்படம் வெளியான நாளில், பாஸிட்டிவ் விமர்சனங்களுக்கான பிரத்யேக தளமான ஜில்மோர்.காம்'ற்காக காணொளியொன்றை பேசியிருந்தேன். யூடியூபில் கிடைத்தால் பார்த்துவிட்டு துப்பவும்) இந்த ஆழ்நிலை உறக்கத்தில் ஆண்களுக்கு உறுப்பு விறைப்பு ஏற்படும். சராசரியாக ஓர் இரவிற்கு இரண்டிலிருந்து ஆறு முறைகள். உளவியல் சார்ந்த விறைப்புத்தன்மையற்றவருக்கு, உறக்கத்தில் இந்த விறைப்புகள் எந்த பாதிப்புமின்றி நிகழும். உடலியல் சார்ந்த விறைப்பு பிரெச்சனைகள் உள்ளவர்களுக்கு உறக்கத்தில் இந்த விறைப்பு நிகழாது. இதை எப்படி கண்டுப்பிடிப்பதென்றால், ஆய்விற்காக வரும் நோயாளிக்கு ஆணுறுப்பை சுற்றி ஓர் எலாஸ்டிக் சாதனத்தைப் பொறுத்திவைத்து தூங்கவைக்கவேண்டும். உறுப்பு விறைக்கும்போது அந்த எலாஸ்டிக் சாதனத்தின் அளவு மாறுபடுவதை ஒரு சென்ஸார் கண்டுபிடித்து குறித்துவைத்துக்கொள்ளும். விழித்தவுடன் எத்தனை முறை என்பதை கம்ப்யூட்டர் சொல்லிவிடும். சிம்ப்பிள்.

இந்த விறைப்புகளுக்கும் பாலியல் கனவுகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்ல்லை. விறைப்பை நிகழாமல் செய்யும் நரம்பு மண்டலம், ஆழ்நிலை உறக்கத்தின் போது தற்காலிகமாக செயலிழப்பதால், விறைப்பு நிகழ்கிறது. அவ்வளவே. என்ன சங்கடமெனில், உறக்கவிறைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் உறக்கம் முடியும்தருவாயில்தான் நடக்கின்றன. காலையில் விழிக்கும் போது, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் தூங்கி விழித்து நடமாடிக்கொண்டிருந்தால், நாம் விறைப்புடன் இருக்கும்பட்சத்தில் கூனிக்குறுக வேண்டியதில்லை. அதுவொரு சாதாரண உடலியல் நிகழ்வு. அதே நேரம் இதையெல்லாம் அறிந்துகொண்டு அதனை தன் ஆண்மையின் வெளிப்பாடாகவும் நினைத்து பெருமைப்பட தேவையில்லை. ஏனெனில், ஆண்மையென்பது சர்வநிச்சயமாக மீசையை முறுக்குவதிலோ, ஜல்லிக்கட்டிலோ, உடல்வலிமையிலோ, வீரியமான செக்ஸிலோ, குறியிலோ இல்லை; ஓர் ஆணை சுற்றியுள்ள பெண்களின் மனதின் comfortness'இல் இருக்கிறது.


°